டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும்போது அந்த 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.
இந்த புதிய பணிகளுக்கு தற்போதுள்ள டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை சேகரிக்க தனி இடம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணி கூடுதல் சுமையாக அமையும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம் இந்தக் குழுவை அணுகலாம்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.