இமாச்சல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்து திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இமாசலப்பிரதேசம் சம்பா மாவட்டம் பைர்கர்-சச்-பாஸ் கில்லர் கணவாய் சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று, எதிர்பாராதவிதமாக 1,650 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த ஜீப்பின் ஜி.பி.எஸ். கருவி காட்டிய இருப்பிடத்தை வைத்து 2 நாட்களுக்குப் பிறகு கடந்த 31ம் தேதி மீட்புக்குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜீப் டிரைவர் உட்பட உயிரிழந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலதிபர் கார்த்திகேயன் (48), அவரது மனைவி மணிமாலா (42) மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர்களது மகன் நந்தன் (13) ஆகிய மூவரும் அடங்குவர். உயிரிழந்த மணிமாலாவின் சொந்த ஊர் திருப்பூர் செங்குந்தாபுரம் ஆகும். அவர் பெங்களூருவில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மகன் நந்தன் ஒரு டேக்வாண்டோ வீரர் ஆவார்.
இமாச்சலப்பிரதேசம் டல்ஹவுசி பகுதியில் கடந்த மாதம் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பதற்காகவே கார்த்திகேயன் குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர். போட்டி முடிந்ததும் சச் கணவாய் பகுதிக்கு மலையேற்றம் செல்லவிருப்பதாக கடந்த 29ம் தேதி உறவினர்களிடம் போனில் பேசியுள்ளனர். அதன்பின்னர்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து இமாசலபிரதேசத்துக்கு விரைந்த உறவினர்களிடம் பிரேத பரிசோதனைக்குப் பின் 3 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட இவர்களது உடல்கள், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் செங்குத்தபுரம் பகுதியில் உள்ள மணிமாலாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, 3 பேரின் உடல்களும் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
