தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோடிக்கணக்கான பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய திமுக ஆட்சியில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் கால சிறப்பு அறிவிப்பாக பிப்ரவரி மாதமே மூன்று மாதத் தொகையுடன் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மே 15-ம் தேதி என்பதால், இந்த மாதத்திற்கான தொகை தடையின்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும், சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, “முந்தைய அரசுகளின் நல்ல மக்கள் நலத்திட்டங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது” என உறுதி அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், தற்போதைய 1.31 கோடி பயனாளிகளுக்கும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத் தொகை மே மாதமும் தடையின்றி நாளை (மே 15) அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.
ரூ.2,500 எப்போது? புதிய தகவல்:
தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் ‘மதிப்புமிக்க மகளிர் திட்டம்’ மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. நிதி நிர்வாகத்தை சீரமைத்த பிறகு, அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த ரூ.2,500 வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை தற்போதைய ரூ.1,000 வழங்கும் முறை தொடரும் என்றும், புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விரைவில் வரவேற்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
