சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையில் திமுக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் இடங்களை கேட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. புதிய கட்சிகளின் வருகை காரணமாக தொகுதிகளை குறைத்து கொள்ளுமாறு திமுக கோரிக்கை வைத்து வந்த நிலையில், சில கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் தொடர்ந்து திமுகவின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தவாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து உதயசூரியன் சின்னத்தில் நின்று வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தேர்தலில் தவாகவுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டுமென சில கோரிக்கைகளை முன்வைத்தார் வேல்முருகன். ஆனால் திமுக தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். இதனை தொடர்ந்து திமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது பேஸ்புக் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், தன்னுடன் இருக்கும் சில அமைப்புகளை வைத்து தனி அணியாக போட்டியிட திட்டம் என கூறியிருந்த நிலையில், திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது இந்த முடிவால் தவாகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version