வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பேரணாம்பட்டு அடுத்த பொகலூர் காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிவதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் காட்டில் நடமாடிய இரண்டு பேரை மடக்கிப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் (24), ஊனை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வேட்டையாடி வந்துள்ளனர். பின்னர், அந்த விலங்குகளின் கறியை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மேல்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான அஜித் மற்றும் புகழேந்தி ஆகிய இருவர் மீதும் வேறு காவல் நிலையங்களில் ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா? இவர்களுக்குப் பின்னால் பெரிய வேட்டைக் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version