கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட விவகாரத்தில் சலசலப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, கனிமொழி எம்.பி. டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்த கருத்துகள் தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை கனிமொழி தெளிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதா? இல்லையா என தடுமாறுகிறது. திமுக டெல்லிக்கு அடிமையாகி விட்டது. ராகுல்காந்தி எம்.பி உடனான கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, திருவாரூர் செய்தியாளர் சந்திப்பில், எம்.பி கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாறுவேடம் போட்டு, போய் பார்த்தது யார்?துணிச்சலாக சிங்கப் பெண்ணாக இருக்கிற கனிமொழி தன்னுடைய காரில்தான் சென்றார்.
மாற்றுக்காரில் செல்லவில்லை.தமிழ்நாட்டு மக்களை பாஜகவிடம் அடகு வைப்பதற்காக, முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு சென்றார்கள். ஆனால் எங்கள் சந்திப்பு நேர்மையான – கண்ணியமான சந்திப்புஎங்களுடைய தோழமை கூட்டணிக்கு எந்தவித நெருக்கடியையும் நாங்கள் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
