விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல், தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி புறப்பட்டு விட்டார். தொடர்ந்து முதலமைச்சரும், சபாநாயகர் அப்பாவும் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தனர்.
மேலும், வரும் சனிக்கிழமை வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2வது நாளான நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இரங்கல் தீர்மானம் மற்றும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 3வது நாளாக சட்டப்பேரவை கூடியது.
அப்போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். அதாவது, விவசாயிகள் பிரச்சனை குறித்து ஜீரோ நேரத்தில் பேச அனுமதி தரும்படி எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். ஆனால், சபாநாயகர் அப்பாவு, அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், பேரவையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் மூலப்பொருள்கள் விலை உயர்வால் வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து ரூ20 ஆக உயர்த்த கோரியும் அரசு ஏற்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
