தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் 16(4-A)-ஐ அமல்படுத்தும் வகையில் தனிச் சட்டம் கொண்டுவரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய பஞ்சமி நிலஉடைமைச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மக்களுக்கான சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.5,000 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரும் சிறப்புத் திட்டம், நிலமற்ற ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், சமூக நீதித்துறையின் பணிகளை பாராட்டியதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
