தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான ‘ஆட்சி மாற்ற சென்டிமென்ட்’ விவாதம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஐ.பி.எல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்பதுதான் அதற்கு காரணம்
கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக அரியணை ஏறியபோது, தோனி தலைமையிலான சிஎஸ்கே தனது 2-வது கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, துபாயில் நடைபெற்ற தொடரில் சிஎஸ்கே தனது 5-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ‘ஆட்சி மாற்ற மேஜிக்’ இப்போது 2026-லும் நடக்குமா என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
தற்போதைய ஐ.பி.எல் 2026 நிலவரம்:
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இன்னும் கடினமாகப் போராட வேண்டிய சூழலில் இருந்தாலும், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள இந்த வேளையில், அதே ‘சென்டிமென்ட்’ படி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து 6-வது கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிவிட்டு வருகின்றனர். “ஆட்சி மாறினால் அணி மாறும், கோப்பை வரும்” என்ற இந்த வைரல் கணக்கு நிஜமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
