தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார்.
முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் இரண்டாம் கட்ட விருது விழா, நாளை (4/6/25) அன்று மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பு செய்யப்பட உள்ளனர்.
பெற்றோர்கள் முன்னிலையில் பிள்ளைகள் கௌரவிக்கப்படும் நிகழ்வு உண்மையிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றாவது ஆண்டாக விஜய் இவ்வாறு மாணவர்களை அழைத்து பாராட்டி வருகிறார். கட்சியைத் தாண்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விஜய் சென்று சேர்ந்துள்ளதற்கு இச்செயலும் ஒரு காரணமாகும்.