புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பிரச்சாரத்திற்காக சென்றுக்கொண்டிருந்த விஜய் கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களை உள்ள நிலையில் புதுச்சேரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ரோடு ஷோ நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .தமிழகத்தை போன்றும் புதுச்சேரியிலும் தனித்து களமிறங்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி 23 இடங்களில் பிரச்சாரம் நடத்த புதுச்சேரி காவல்துறையினரிடம் அனுமதி கூறியிருந்தது. ஆனால், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறி, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் ஏப்ரல் 4-ம் தேதி விஜய் பரப்புரையை நடத்திக் கொள்ள வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மேலும் விஜய்க்கு புதுச்சேரி காவல்துறை என பிரச்சாரம் நடத்துவதற்கு 11 நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளனர்.
அதன்படி, இன்று பிரச்சாரத்திற்காக புதுச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்த விஜய் கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மரக்காணம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, மலர்களை தூவி விஜய்க்கு தவெகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது சிலர் கார் மீது ஏறி முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றனர். சிலர் கண்ணாடி வழியாக விஜய்க்கு முத்தம் கொடுத்தனர். இதையடுத்து, உடனடியாக அங்கிருந்த விஜய்யின் பாதுகாவலர்கள் அவர்கள் அப்புறப்படுத்தினர்.
