தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து கட்சி தேர்தல் பணிமனை அருகே பரப்புரையில் ஈடுபட்ட விஜய், சட்டம் – ஒழுங்கு சரியில்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எல்லாம் முக்கியம் கிடையாது என விஜய் குற்றஞ்சாட்டினார்.

இதனை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனம் சென்ற போது பெரம்பூர், மூலக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளத்தூர் தொகுதிக்கு விஜய் வந்தபோது அங்கு ஏராளமானோர் கூடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விஜயின் வாகனம் மெதுவாக நகர்ந்தது. பின்னர் அகரம் பகுதியில் பேசிய விஜய், தவெக கொளத்தூர் தொகுதி வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 நிமிடங்களில் பரப்புரையை முடிக்க காவல்துறை கூறிய நிலையில் அடுத்து வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த தெருமுனை பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பொதுச் செயலாளர் என். ஆனந்த், தன்னிச்சையாக பிரசாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதலை காவல்துறை செயல்படுத்தாததால் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார் மனுவில், விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தர சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோ பதிவு ஆதாரங்கள் உடன் அதிகாரி குமார் புகார் அளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version