சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழர்களுக்கு முன்னுரிமை

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேதகர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும், தற்போதுள்ள இடப்பங்கீடு முறை என்பது, வகுப்புவாரி முன்னுரிமை (Communal G.O.) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும். அம்முறையில் சமூகநீதி உரிமையான இடப்பங்கீட்டு முறையை முன்நிறுத்தித் தன் வருவாய் நோக்கத்திற்காக பூர்வீகத் தமிழ்க்குடிகளுக்கிடையே சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கித் திராவிடக் கட்சிகள் இதுவரை அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன.

நாம் தமிழர் அரசானது இம்முறையை அறவே ஒழித்துத் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ, அதே முன்னுரிமை பிறமொழி வழித்தேசிய இன மக்களுக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

வரி விதிப்பில் உரிய மாற்றங்கள்

ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி, பருவ வரி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற பல்வகை வரிகளை ஒன்றிய மாநில அரசுகள் 50:50 என்கிற வகையில் கையாளுகின்றன. இந்த முறையினை மாற்ற வேண்டும். அந்தந்த மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் 75 விழுக்காடு மாநில அரசுக்கும், 25 விழுக்காடு ஒன்றிய அரசுக்குமாக பிரித்துக் கொள்ளும் வகையில் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து நாம் தமிழர் அரசு போராடும்.

அதே போன்று, இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கின்ற மாநில அரசுகள் ஒவ்வொன்றும் அந்தந்தத் தேசிய இனங்களின் நலன் சார்ந்து தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற உரிமையைப் பெற நாம் தமிழர் அரசு பாடுபடும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை

வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் வாழ்கின்ற அனைத்துத் தமிழ் மக்களுக்கும் அஞ்சல் வழியில் வாக்களிக்கும் உரிமை பெற்றுத் தரப்படும்.

தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை

தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாவட்ட நீதிமன்ற அதிகாரம் கொண்ட உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும். உரிய நீதிபதிகளின் எண்ணிக்கை கொண்டுவரப்படும். காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடம் சமூகநீதிக் கொள்கைகள் அடிப்படையில் நிரப்பப்படும்.

தமிழில் படிவங்கள்

கீழ் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும் அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்படும்.

இளம் வழக்கறிஞர்கள்

சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை உரிமையியல், குற்றவியல் வழக்குகள், காவல் நிலைய சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்துச் சட்டம் தொடர்பான உதவிகள் செய்வதற்குச் சட்ட உதவி மையம் அமைக்கப்படும். இச்சேவைகளில் சட்டக்கல்வி முடித்த இளம் வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்தச் சமூகச் சேவை சட்டக்கல்வி முடிக்கின்ற இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும்.

குறுஞ்செய்தியில் தகவல்

மாநிலம் முழுக்க இருக்கின்ற நீதிமன்றங்களில் இணையத்தள வசதி உடனடியாக ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளைக் கவனிக்கத் தகவல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். வழக்கின் வினாவுதல் நாள்கள் வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கைப்பேசிக் குறுஞ்செய்தி மூலமாகத் தெரிவிக்கப்படும்.

சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: 

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்கப்படும். நீர் நிலைகளில் கழிவுநீ கலப்பது தடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version