தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இயக்கத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்,
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிலர் திமுகவைப் பிடிக்காது எனச் சொல்லுவார்கள். அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது. இந்த இனத்தில் இருந்து படித்து முன்னேறி ஐஏஎஸ், ஐபிஎஸ் என ஆவது பிடிக்காது. இடஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக உட்காருவது பிடிக்காது. எல்லோரும் கோவிலுக்குள் நுழைவது பிடிக்காது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது. தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது. தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது.
சுயமரியாதை இயக்கம் தேடித்தந்த பேரை பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அறிவியலை பின்னுக்குத் தள்ளி, பிற்போக்குத்தனத்தையும் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும் தீவிரமாகவும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிற அரண்தான் திராவிட மாடல்.
வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளப் போவதற்கான சமுதாயத் தேர்தல். தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.