அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணிகளிடையே ஏற்பட்டுள்ள கடும் மோதல் போக்கு காரணமாக, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளிடையே இரண்டு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த அசம்பாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம்,அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் கோயிலாக மதிக்கிறோம்; அங்கு கலகம் செய்யப்போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. சட்டப்படி நாங்கள் தான் உண்மையான தொண்டர்கள் என்று நிரூபித்த பிறகுதான் அங்கு கால் வைப்போம். அதுவரை அங்கு செல்லமாட்டோம். ஒருவேளை அங்கு சென்றால், அது எனது உயிர் போகும் தருணமாகத்தான் இருக்கும்” என உருக்கமாகத் தெரிவித்தார்.

ஆளுநரைச் சந்திக்கும் இபிஎஸ்: இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க “குதிரை பேரத்தில்” ஈடுபடுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆளுநரிடம் முறையிட அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் சில நிர்வாகிகள் தவெக பக்கம் சாய்ந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை கோரி இபிஎஸ் மனு அளிக்க உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version