திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்குட்பட்ட 55 வது வார்டு பெரிச்சி பாளையம், வீரமாத்தி அம்மன் கோவில் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு இரு முறை குடிநீர் விநியோகித்து வந்தனர். தற்போது ஒரு மாதங்களாக குடிநீர் முறையாக வருவதில்லை இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கேட்டபோது பழைய குடிநீர் குழாய் தண்ணீர் அடைத்து விட்டதாகவும், புதிய குடிநீர் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்ட இணைப்பிற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர்.
எங்கள் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு குழாய் இதுவரை இணைக்கப்படவில்லை எனவே புதிய குடிநீர் இணைப்பில் இணைக்க வேண்டும். இணைக்கும் வரை பழைய குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
