ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்க முயன்றதாக ஊராட்சி (பஞ்சாயத்து) உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் இருந்து பணம் வசூலித்து விருந்து நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி, சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தபோது, குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறிய பதின்பருவ சிறுவன், அந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், சிறுமியின் தாயின் விருப்பத்திற்கு எதிராக கிராம பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.20 ஆயிரத்தை உடனடியாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த ரூ.20 ஆயிரம் பணத்தை பயன்படுத்தி சில பஞ்சாயத்து உறுப்பினர்கள் உணவு மற்றும் மதுபான விருந்து நடத்தியதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிராமத்துக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிறுமி மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரி மோகன் குமார் சிங் தெரிவித்தார்.

போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளியை காப்பாற்ற பணம் பெற்றார்களா என்பது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழு, மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் வருவாய் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய குழு கிராமத்துக்குச் சென்று தனித்தனி விசாரணை நடத்த உள்ளது.

அதேபோல், இந்த சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஷிஷிர் குமார் சிங் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுஷில் காக்கா தலைமையில் தனி விசாரணைக் குழுவையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version