நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தலைமையில், கடந்த மே 10-ஆம் தேதி புதிய ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக விஜய்யும், அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்மல் குமார், கீர்த்தனா ஆகிய 9 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் உட்பட மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது வெறும் 10 பேர் மட்டுமே உள்ளதால், நிர்வாக வசதிக்காக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனையும் நடத்தினார்.
நாளை அமைச்சரவை விரிவாக்கம்?
பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் அமைச்சரவையில் இடம் கோரியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 2 பேருக்கும், தவெக தரப்பிலிருந்து புதிய முகங்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை திரும்புகிறார். இதனால், நாளை வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இழுபறி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் இதில் இழுபறி நீடிக்கிறது.
