மிரட்டி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் கைது செய்தது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தடையுத்தரவு மற்றும் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவர், மீண்டும் தனது சவுக்கு மீடியா சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில், மனமகிழ் மன்றம் நடத்தும் ஹரிச்சந்திரன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.

‘அவரது மனமகிழ் மன்றத்தை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி, தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தி விடுவேன்’ என்று மிரட்டி ரூ.94 ஆயிரம் பறித்ததாக போலீசார் பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை. வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார்.

வேறு வழியில்லாத நிலையில், வழக்கறிஞர்கள் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். வந்த வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில், தீயணைக்கும் படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். சவுக்கு சங்கரிடம் நடத்திய விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version