சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகருக்கு திரளான பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.

சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.

இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 18ம்படி கருப்பண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கங்கள் எழுப்பி பரவசமடைந்தனர்.

இன்று (30.04.2026) காலை மதுரை மாநகருக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோயிலை அடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை (01.05.2026) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் நடைபெற உள்ளது. தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தரும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப நிவர்த்தி அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோல நிகழ்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. 4ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 5ம் தேதி அழகர்மலையை அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version