அறந்தாங்கி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா வீழிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக கோயில் பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசும் பணிகள் நடைபெற்றன.
கடந்த நான்கு நாட்களாக யாகசாலை அமைத்து வேதாச்சாரியார்கள், மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தநிலையில், இன்று (30.04.2026) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் யாக சாலையை வலம் வந்து கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கலசங்களில் இருந்து வழிந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து, சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
