விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை என்றும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படி தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை என்றார். அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை இன்றைக்கு மாநாட்டின் மூலமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மாநாட்டை நடத்துகின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார்.
ஆங்கிலம் குறித்து அமித்ஷா அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, தாய்மொழி என்பது முக்கியம். அனைவருக்கும் தாய்மொழி என்பது முக்கியம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி தான் இதனை சொல்லி உள்ளார் என்றும் அவர் கூறினார்.