சென்னையில் உள்ள பால் நிறுவனத்தில் ரூ.45கோடி கையாடல் செய்த மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் பஞ்சலால். 37 வயதான அவர், புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் போது, இவர் ரூ.45கோடி பணத்தை கையடல் செய்தது உயரதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் இது குறித்து கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய போது, பணத்தை கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் வசித்த பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் மின்விசிறியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நைலான் கயிறால் நவீன் பஞ்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புழல் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மேலாளர் நவீன் பஞ்சலால் பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கு மின் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
‘என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். புகார் அளிக்க முடிவு செய்ததால் என்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயந்து தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். மோசடி குறித்து வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாகக் கூறி முதல் கட்டமாக கடந்த மாதம் 26ம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தினேன்.
பின்னர் மூன்று மாதத்தில் மீதி தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு, வேறு யாருக்கும் தொடர்பில்லை. பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்து மொத்த பணமும் என்னிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடியில் வேறு யாரும் பயனடையவில்லை.
இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம். பால் நிறுவனம் என்னுடைய சொத்து ஆவணங்களையும், பாஸ்போர்ட்டையும் காசோலைகளையும் வாங்கி வைத்துள்ளது. பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததற்கான அத்தாட்சி கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என கூறியபோதும் பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் என்னை சித்ரவதை செய்தது.
எனவே, என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. (பால் நிறுவன அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு) எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும்’ என நவீன் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தில், பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது குடும்பத்தினர் என அனைவரையும் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு வருத்தத்தையும் நவீன் பதிவு செய்திருந்தார். இந்த சூழலில் தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் போலீஸ் துணை கமிஷனர் பாண்டியராஜனை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வவருகிறது. எனவே இது தொடர்பாக மேற்கு மண்டல இணை கமிஷனர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர போலீ்ஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
