சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
நடிகர்கள் இது குறித்தான விளம்பரத்தில் நடிப்பதற்காக பெரும் அளவிலான கமிஷனை பெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஐதராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத சூதாட்டம் செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி வரும் 30ம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜ்-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேப் போல் ஒவ்வொரு நடிகர்களுக்கும், ஒவ்வொரு நாளில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.