உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம் என நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் செல்வகணேஷ் என்பவர் காதலியின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ளார். அவர்களது போலீஸ் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கவினின் கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கவினின் காதலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
“கவினின் கொலையில் என் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சுர்ஜித்தின் சகோதரி மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 ஆம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசியிருக்கிறார்கள். அந்த நேரமே அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பா என்னிடம், ‘நீ லவ் பண்ணுறியா?’ என்று கேட்டார். அப்போது நான் ‘இல்லை’ என்று சொன்னேன். ஏனென்றால், கவின் என்னிடம் டைம் கேட்டிருந்தான்.
“நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் உண்மை தெரியாம எதும் சொல்லாதீங்க”கவினுடன் பழகிய இளம்பெண் சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ #Tirunelveli #Nellai #NellaiCase #NellaiKavinCase #Nellaikavin #Kavincase #Subhashini #kavin pic.twitter.com/CTEpayuHsu
— TNTalks (@tntalksofficial) July 31, 2025
அதனால், அப்பாவிடம் அப்போது சொல்லவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டது. இரண்டு பேருக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், கவினுக்கு போன் செய்த சுர்ஜித், ‘பொண்ணு கேக்க வாங்க’ என்று சொல்லியிருக்கிறான். ‘எனக்கு திருமணம் முடிந்தால்தான் என்னுடைய தொழிலைப் பார்க்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறான். அது எனக்குத் தெரியும்.
அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள். நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அதன்பிறகுதான் இப்படி நடந்துவிட்டது. தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்” என்று கூறியுள்ளார்.