10க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்து விட்டதாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாநில மகளிர் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையான விஜய் டி.வி.யில் வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார். ஜாய் கிரிஸில்டாவும் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். மேலும், ஜாய் கிரிஸில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததோடு, அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாகவும், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்துகொண்டு, தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் தெரிவித்தார்.
புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் இணைந்து ஜாய் கிரிசில்டா, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.
பின்னர் வழக்கறிஞர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுதா, “ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்திருந்தார். புகார் கொடுத்து ஒன்றரை மாதமாகி உள்ளது. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த புகார் எந்த காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது என்பதே தெரியவில்லை. அதன் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் துணை ஆணையர் அழைத்து விசாரணை நடத்தினார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்தியதாக கூட தெரியவில்லை.
ஊடகங்கள் மூலம் விசாரணை நடத்தியதாக தெரிந்துகொண்டோம். துணை ஆணையர் அலுவலகத்தின் பின் வழியாக ரங்கராஜை போலீசாரே அனுப்பி வைத்ததாக தகவல் வந்தது. புகார் மீது எந்த பலனும் இல்லாததால் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். காவல்துறையினர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
திருமணம் செய்து ஏமாற்றி விட்டு ரங்கராஜ் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். குழந்தையை கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டார் ஆனால் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த குற்றத்திற்கான நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை.
குழந்தையை கொடுத்து விட்டு ரங்கராஜ் ஒன்றும் தெரியாதபோல இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. எங்களை அணுகி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். ஏறாத படிகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை. பெண்ணுக்கு எதிரான குற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜாய் கிரிஸில்டா கூறுகையில், “தனக்கும் தனது பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் தான் எனவும்” ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.