ஜி20 தலைவர்களின் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை (நவ. 21) விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அப்போது இந்திய நடன மற்றும் பாடல் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உற்சாகமாக கைதட்டி கண்டு ரசித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்ற உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
