தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டுள்ள முன்னோடித் திட்டங்களின் சாதனைகளையும், பயனடைந்த மகளிரின் வாழ்க்கை அனுபவங்களையும், மாநிலத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நாளை (12-12-2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்,.

முதலமைச்சரால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிருக்கும் மாதம் ரூ. 1000 விகிதம் இதுவரை ரூ. 27,000 வழங்கப்பட்டிருக்கிறது. திட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 15, 2023 முதல் நவம்பர் 2025 வரை ரூ.30,838.45 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் கூடுதல் பெண்கள் பயனடையும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, இத்திட்டம் 12-12-2025 அன்று இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. புதிதாக இலட்சக்கணக்கான பெண்கள் இணைக்கப்பட்டு இனிவரும் மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பெறவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் சமூக சேவகரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட துளசிமதி முருகேசன், திரைக் கலைஞர்கள் சத்யராஜ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள்,அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மாநில அளவில் நடைபெறும் இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களினால் பயன்பெற்ற, சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் வகையில் அமையவிருக்கும் இந்த முழு நிகழ்வையும் தமிழ்நாடு அரசு பெண் அதிகாரிகளே ஒருங்கிணைக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. இது பெண்களுக்கான அரசு; பெண்களை முன்னேற்றும் அரசு என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்த விழா அமையும் என்கிறார்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள்.
மேலும், கல்வி, தொழில் முனைவு, மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், உற்பத்தி, அரசியல், கலை, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களும், அரசின் திட்டங்களைப் பயன்படுத்திய அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
