2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசான நர்கஸ் முகமதியின் கைதுக்கு நோர்வே நோபல் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கு 680 கி.மீ. தொலைவில் உள்ள மஹ்சத் நகரில், மர்மமான முறையில் இறந்த மனித உரிமை வழக்கறிஞர் ஒருவரின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நிர்வாகம் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியிருந்தாலும், கைது செய்யப்பட்டவர் முகமதிதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் இது தெஹ்ரான் மீதான மேற்கத்திய அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரித்துள்ள நோர்வே நோபல் குழு, “முகமதியின் இருப்பிடத்தை உடனடியாக தெளிவுபடுத்தவும், அவரது பாதுகாப்பையும் நேர்மையையும் உறுதிப்படுத்தவும், நிபந்தனைகள் இல்லாமல் அவரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஈரானில் உள்ள மனித உரிமைகளுக்கான மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹாடி கெய்மி, இந்தக் கைது “மிக அடிப்படையான மனித சுதந்திரங்கள் மீதான இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்” என்று விவரித்தார்.
நர்கஸ் முகமதி யார்? ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்த வலியுறுத்திப் போராடியதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்ட ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு கடந்த 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.
ஈரானின் வடமேற்கில் உள்ள ஜன்ஜான் என்ற இடத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்ற அவர், மாணவர் காலந்தொட்டே சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். பின்னர், படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு பத்திரிகைத் துறைக்கு மாறிய அவர், தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை குறித்த கட்டுரைகளை எழுதி வந்தார். அத்துடன் சீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடியால் ஈரானில் நிறுவப்பட்ட மனித உரிமைகளின் பாதுகாவலர் மையத்தில் அவர் இணைந்தார். அப்போது முதல் அவர் பெண் உரிமை, அனைவருக்குமான சமத்துவம், ஆகியவற்றை வலியுறுத்தியும் மரண தண்டனையை ஒழிப்பது குறித்தும் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் கடந்த 2011இல் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த முகமதி, பின்னர் 2013இல் ஜாமீன் பெற்றார். அதன்பிறகு மரண தண்டனைக்கு எதிரான தனது போராட்டங்களை அவர் தீவிரப்படுத்தினார். இதையடுத்து அவர் மீண்டும் 2015இல் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோதும் அமைதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தார். மேலும், சிறையிலும் அவர் அரசியல் கைதிகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சித்ரவதை மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்தார்.
கடந்த 2022 புர்கா விவகாரத்தில் ஈரான் நாட்டின் கலாசார போலீசாரால் மஹ்சா அமினி என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ’பெண் – வாழ்க்கை – சுதந்திரம்’ என்பதை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் மூலமும் நர்கீஸ் முகமதி பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. மஹ்சா அமினியின் கொலையைக் கண்டித்து முகமதி சிறையிலேயே போராட்டம் நடத்தினார். இதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
