தவெக தலைவர் விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடியை சேர்ந்த அக்கட்சி பெண் நிர்வாகி, தவெகவில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக களப் பணியாற்றி வந்த நிலையில், பதவி வழங்காமல் புறக்கணித்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். ஆசிரியர் பயற்சி முடித்த இவர், தவெகவில் இணைந்து தீவிரமாக களப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
முக்கிய நாட்களில் தவெக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.
தொடக்கத்தில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக தன்னை தெரிவித்துக் கொண்டதுடன், கட்சியில் தனக்கு முன்னுரிமை அளித்து பொறுப்பு வழங்கப்படும் என்று அவர் காத்திருந்தார். அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்து, அதற்கான உத்தரவை வெளியிட்டார். இதில், அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் நடிகர் விஜய் காரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவர் தள்ளி விடப்பட்டார். தொடர்ந்து, பனையூரில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போதும் அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்த நிலையில் உற்சாகமிழந்து காணப்பட்டதுடன், சரியாக உணவருந்ததாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அவர் தூக்க மாத்திரைகள் தின்று, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாளையங்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தவெகவில் பதவி வழங்காமல் உதாசீனப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
