வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் Brooklyn சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின.
இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன.
அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபர் மதுரோவும், அவரது மனைவியையும் சிறைக்கு அழைத்து செல்லும் விடியோவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, சிறை உடையில் நொண்டியபடி கைவிலங்குடன் மதுரோ, அவரது மனைவி இருவரும் நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடங்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சட்டத்திற்கு எதிராக அவரை கைது செய்துள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
