நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார திசையைத் தீர்மானிக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள், முக்கியப் பொருளாதார முடிவுகள் மற்றும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மற்றும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஆகியவை இந்தக் கூட்டத்தொடரை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, 140 கோடி குடிமக்களின் தன்னம்பிக்கை மற்றும் உறுதியின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இருந்தது என்று கூறினார். குடியரசுத் தலைவரின் உரை, குறிப்பாக இளைஞர்களை மையமாகக் கொண்டு, 1.4 பில்லியன் குடிமக்களின் கனவுகளையும் விருப்பங்களையும் துல்லியமாக எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
https://x.com/ANI/status/2016745387890266192?
பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடக்கத்திலும், 2026 தொடக்கத்தையும் முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை அனைத்து எம்பிக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் பல முக்கிய அம்சங்களையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவையில் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
21-ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது காலாண்டு தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதை ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றார். மேலும், 2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கான அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என கூறிய அவர், இந்த நூற்றாண்டின் இரண்டாம் காலகட்டத்தின் முதல் பட்ஜெட் இது என்றும், இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்பவர் நிர்மலா சீதாராமன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய தருணம் என்று வர்ணித்த அவர், இந்த சாதனை தனித்துவமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான ஒன்றாகும் என்றும் வலியுறுத்தினார்.
ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோடி, 27 நாடுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையினருக்குச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ஒப்பந்தம், தன்னம்பிக்கை மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு பட்ஜெட் மீது கவனம் செலுத்துவது இயல்பானது என்றாலும், இந்த அரசாங்கத்தின் அடையாளம் எப்போதும் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவையே என்று அவர் குறிப்பிட்டார். நாடு இப்போது சீர்திருத்த விரைவு ரயிலில் வேகமாகப் பயணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றத்தில் உள்ள தனது சக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்த சீர்திருத்த விரைவு ரயிலின் வேகத்தை அதிகரிப்பதில் அவர்களும் ஒரு நேர்மறையான பங்கை வகிப்பதாகக் கூறினார். இந்த ஒத்துழைப்பினால்தான் சீர்திருத்தங்களின் வேகம் சீராக அதிகரித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலளிக்க தயார் என்ற அவர், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாடாளுமன்றம் திகழவேண்டும் என்றும் நாடாளுமன்றம் மக்களின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் என்றார். மேலும், இந்தியா 2028க்குள் உலக பொருளாதாரத்தில் 2ம் இடம் பிடிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
