நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று பிரதமர் மோடி இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஓம். பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை தாக்க சதி செய்யவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனால் நான் தான் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறினேன் என்றும் விளக்கமளித்தார்.
இருப்பினும், சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் நாங்கள் அமளியில் ஈடுபட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இது நாடு முழுவதும் பேசுப்பொருளானது. இதையடுத்து, நேற்று மாலை 5 மணி அளவில் அவைக்கு சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பதிலுரை வழங்கினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து மக்களவையில் கூச்சல்-குழப்பம் நிலவியதால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை தொடர்ந்து மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
