தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விடுவித்து நயினார் நாகேந்திரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதில் இருந்து அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையை சமாதானப்படுத்த கட்சி சார்பில் கொடுக்கப்படும் பொறுப்புகளையும் அவர் தட்டிக் கழித்து வருகிறார்.
தேர்தல் பொறுப்பாளர் பதவியை, தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் செய்ய முடியாது என தவிர்த்துள்ளார். தான் பாஜகவில் இல்லை என்றால், தமிழ்நாட்டில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற எண்ணத்தை தலைமையிடம் விதைக்க அவர் பார்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, பாஜக சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவியை அவருக்கு பாஜக வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவில் சக்தி கேந்திரா என்பது மிகவும் முக்கியாமன ஒரு பதவி. சக்தி கேந்திரா என்பது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். குறிப்பாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் பணியை மையப்படுத்தி செயல்படும்.
தமிழகம் முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் பணியை இந்த சக்தி கேந்திரா செய்யும். பாஜகவில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கு கீழ் ஓட்டுச் சாவடிகளில் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர். இதில் 3 வாக்கு சாவடிகளுக்கு ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி 3 வாக்குச்சாவடிகளுக்கான பொறுப்பாளராக இருப்பவர் தான் சக்தி கேந்திரா பொறுப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர்களின் பணி தங்களுக்கு கீழ் உள்ள வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து மக்களை அதிகளவில் தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும். தமிழக பாஜகவில் இதுவரை ம் ஒத்தம் 25,000 பேர் சக்திகேந்திரா பொறுப்பாளர் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாநில சக்தி கேந்திரா தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு கிடைக்கும் பட்சத்தில் அவர் தனக்கு கீழ் உள்ள 25,000 பேரை கண்காணித்து ஆலோசனைகளை வழங்குவார்.
