மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் வலிமை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.
140கோடி மக்களே இந்தியாவின் வலிமை. முன்பு இருந்தது போன்ற உணவு பொருட்கள் தட்டுப்பாடு எதுவும் தற்போது இல்லை. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலகத்தில் பதற்றமான நிலை மற்றும் போர்களுக்கான காலமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான காலம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உபசரித்தார்.
ஆனால், இந்த அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தரவுகள் மிகவும் முக்கியம். நம் மக்கள், தரவுகள், உணவு உற்பத்தி செய்யும் திறன், எரிசக்தியை நாம் பாதுகாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரவுகள் குறித்து பேசியிருக்க வேண்டும். தரவுகளை பற்றி குறிப்பிட்டிருந்தால் அமெரிக்காவுக்கு சமமாம அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்.
தரவுகள் நாட்டை வல்லரசாக மாற்றும், அமெரிக்க டாலரை காக்க இந்திய தரவுகள் தேவை. தங்கம், வெள்ளி விலை உயர்வு, டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச பதற்ற நிலையை கருத்தில் கொள்ளாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
