கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது போல தவெக அரசு செயல்படுவதாகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று தெரியாமல் ஆட்சி தடுமாறுவதாகவும், ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான தவெக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகிய நிலையில், புதிய நியமனங்கள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்றும், இதனால் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், இதுகுறித்து தவெக-வைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சிகளிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்படாததால் வழக்குகள் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் கூடுதல் செலவுகளையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். எனவே, அனுபவமிக்க மற்றும் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி நிர்வாகத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், “சிறு குழந்தைகள் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவது போல் அரசு நிர்வாகத்தை கையாளக் கூடாது. மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
