மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் உத்தரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன்படி, 2023 செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகையால் பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரவுள்ளநிலையில், மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த புதிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்ற ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து, ஆட்சி வந்ததும், பல திட்டங்களை நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு சாத்தியமே இல்லை என சில கூறியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், நிதி நெருக்கடியை சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் 1 கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இந்த திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு, திராவிட மாடல் 2.O-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்றும் இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.
