வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தமிழகத்தை போன்று அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் மாநிலம் தேர்தல் நடவடிக்கைகளில் பரபரப்பாக உள்ளது. இந்தநிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக குறிவைத்து, வடகிழக்கு மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.
குவஹாத்தியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களை பாஜகவின் அஷ்டலட்சுமி என்று கருதுவதாகக் கூறினார். அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அசாமுக்கு இதுவே தனது முதல் பயணம் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸ் காலத்தில் அசாமிற்கு வெறும் 10,000 கோடி ரூபாய் வரிப் பகிர்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். பிரம்மபுத்ரா நதியின் மீது காங்கிரஸ் 70 ஆண்டுகளில் 3 பாலங்களை மட்டுமே கட்டியதாகவும், பாஜக கடந்த 11 ஆண்டுகளில் 5 பாலங்களை கட்டி முடித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்,
முன்னதாக, திப்ருகார் மாவட்டத்தின் மொரான் பைபாஸில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் ‘அவசரகால விமான தரையிறங்கும் தளத்தை’ தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பயணித்த C-130J ரக விமானம், அவசர காலங்களில் போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது பின்னர், இந்தத் தளத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வான்வழிச் சாகச நிகழ்ச்சிகளைப் பிரதமர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
