ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட, இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, தான் கண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாய் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பி.வி. சிந்து கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சிக்கியுள்ளார்.
தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பி.வி. சிந்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் புகையும் இடிபாடுகளும் தன் பயிற்சியாளருக்கு மிக அருகிலேயே இருந்ததால், அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
“நிலைமை ஒவ்வொரு மணிநேரமும் மோசமாகி வருகிறது. தலைக்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதைக் கேட்பதும், போர் இவ்வளவு வேகமாகத் தீவிரமடைவதைப் பார்ப்பதும் மிகவும் அச்சமாக இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது துபாய் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் சிந்து மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். “தற்போது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நிலைமை சீராகும் வரை நாங்கள் அங்கேயே இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
