தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடக்கூடிய இரு தொகுதிகளின் பெயர்கள் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தவெகவில் உள்ள முக்கியமான நபர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட பின் முதற்கட்டமாக 2026 தேர்தலை இலக்காக வைத்து விஜய் தனது காய்களை நகர்த்தி வருகிறார். மாநில மாநாடுகள், அவ்வப்போதான அறிக்கைகள் என்பதை தாண்டி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய். இடையில் ஏற்பட்ட கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தால் சுமார் ஒரு மாத காலமாக முடங்கியிருந்த தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி முழுமூச்சாக மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் விவகாரம், CBI வழக்குகள், கூட்டணிக்கு யாரும் வராதது, விஜய் மனைவியின் விவாகரத்து விவகாரம் என தடைகள் பல இடைமறிக்கும் போதும் கட்சிப்பணிகள் சுணக்கம் இல்லாமல் செல்வதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது வருகிறது. முன்னதாக வேட்பாளர் தேர்வு பணிகளை விஜய்யே மேற்கொண்டு வருகிறார் என தெரிவிக்கிறது பனையூர் வட்டார தகவல். இத்தகைய சூழலில் தான், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார்; இன்னபிற முக்கிய நிர்வாகிகள் எங்கெங்கு போட்டியிடுகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அத்தகவலின்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய்யின் ‘V’ சென்டிமென்ட் அடிப்படையில் ‘வி’ என தொடங்கும் தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பு எனவும், மீனவ சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் கொண்ட நாகை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அல்லது மதுரையில் போட்டியிட வாய்ப்பு என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் செல்லப்படுகின்றன. வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ள சூழலில் வெளியாகியுள்ள இந்த தகவல் கொஞ்சம் கூடுதல் கவனம் பெறுகிறது.
மேலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தியாகராய நகரிலும், செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும், சி.டி.ஆர்.நிர்மல்குமார் உசிலம்பட்டி அல்லது திருப்பரங்குன்றம் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், பொருளாளர் வெங்கடராமன் மயிலாப்பூரிலும், ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியிலும், ஜே.சி.டி.பிரபாகர் அம்பத்தூரிலும், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கத்திலும், கூட்ட நெரிசல் வழக்கில் கைதான மதியழகன் கரூரிலும் போட்டியிடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பல்வேறு கணக்குகளின் அடிப்படையில் உரியவர்களுக்கு இந்தந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என பார்க்கப்படும் நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது மேற்கூறிய தகவல்களின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.
