உலகளவில் பல்வேறு தினங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகளிர் தினம், குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் முட்டாள்கள் தினத்திற்கு கொடுப்பதில்லை என்று தெரியவில்லை. தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பலரும் வேலை போன்ற பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் போது அவர்களுக்குள் இருக்கும் மனஅழுத்தம், விலகி மனது லேசாகும்.
நம் வாழ்க்கையில் பின்னேக்கி பள்ளி பருத்திற்கு சென்று ஏப்ரல் 1-ம்தேதியன்று சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட சென்ற அந்த நாட்களை மறக்க முடியாது.
அதே போல் நண்பர்களையும், சகோதரிகளையும், சகோதரர்களையும், வீட்டில் உள்ளவர்களையும் ஏமாற்ற உன் சட்டையிலே என்ன கற ? உன் பின்னே நாய் வருது பாரு..? உன் தோள் மேல பல்லி இருக்குது பாரு.. என்று நாம் கையாட்ட உத்திகளை இன்று நினைத்து பார்த்தாலும் உதட்டின் ஓரம் மெல்லிய சிரிப்பு வந்து போகும்.
அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் இன்றும் மறக்க முடியாத பசுமை நினைவுகளாகும். இப்படி பலரையும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் சென்ற முட்டாள்கள் தினம் எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் உள்ள கதைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் ‘முட்டாள்கள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான வரலாற்று மாற்றம் பலருக்கும் தெரிவதில்லை. பண்டைய காலங்களில், குறிப்பாக ஐரோப்பாவின் பல பகுதிகளில், வசந்த காலத்தின் தொடக்கமான ஏப்ரல் 1-ம் தேதியே புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இயற்கையோடு இணைந்த இந்த நாட்காட்டி முறை பல நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்வியலில் ஊறிப்போயிருந்தது.
இந்த நிலையில், 1852-ம் ஆண்டில் கிரிகோரியன் காலண்டர் (Gregorian Calendar) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஆண்டின் முதல் நாள் ஏப்ரல் 1-ல் இருந்து ஜனவரி 1-க்கு மாற்றப்பட்டது. பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டாலும், தகவல் தொடர்பு வசதிகள் குறைவான அக்காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த மாற்றம் சென்றடையவில்லை. மேலும், சில நாடுகள் பழமைவாதக் காரணங்களால் புதிய காலண்டரை ஏற்க மறுத்து, தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர்.
இவ்வாறு உலகம் மாறியது தெரியாமல் அல்லது மாற்றத்தை ஏற்காமல் பழைய முறைப்படி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடியவர்களை மற்றவர்கள் ‘முட்டாள்கள்’ என்று கேலி செய்யத் தொடங்கினர். அவர்களை ஏமாற்றுவதும், கிண்டலடிப்பதும் ஒரு வழக்கமாக மாறியது. காலப்போக்கில் இந்த வேடிக்கையான கிண்டல் நிகழ்வே ஒரு கலாச்சாரமாக உருவெடுத்து, இன்று உலகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி அதிகாரப்பூர்வமற்ற முட்டாள்கள் தினமாக நிலைபெற்றுவிட்டது.
