தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழக பா.ஜ.கவின் பூத் கமிட்டி கூட்டம் நாளை (ஏப்ரல் 13) மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் நமது தமிழக பா.ஜ.க செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/narendramodi/status/2043189583899492838?
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்.15-ம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து, நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை பிரதமர் மோடி பிரமாண்டமான ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
இதில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வைத்துள்ள தொலைநோக்குச் சிந்தனைகளைத் தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்வதைப் பாராட்டியுள்ள பிரதமர், நாளைய கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
