கோபிசெட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் தமிழக முதல்வர் விஜய்யின் 52 வது பிறந்த நாளை ஒட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
”தமிழ்நாட்டில் முதலமைச்சரின் தலைமையில், இன்றைக்கு எல்லாத் துறைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை , ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய ‘டேட்டா’ அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்.
முன்பெல்லாம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலமாக ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் (வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் போன்றவை) வழங்கும் வழக்கம் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னால் மாணவர்கள் வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரைத் தேடிச் சென்றுதான் சான்றிதழ்களைப் பெற முடிந்தது. ஆனால், இப்போது வருவாய்த்துறையே நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று அந்தப் பணிகளைச் செய்து வருகிறது.
அதேபோல், தற்போது பள்ளிக்கல்வித்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து, மாணவர்களின் முகவரி, கல்வித் தகுதி மற்றும் ஆதார் அட்டை விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை அடையாள அட்டையாக வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்று வருகிறது; இது தொடர்ந்தும் நடைபெறும். ஆனால், இந்த புதிய ‘டேட்டா கார்டில்’ சாதி அடிப்படையில் எந்த விவரமும் இடம்பெறாது. பள்ளிகளில் வழங்கப்படும் இந்த அட்டையில் சாதியைக் குறிப்பிட்டால், அது மாணவர்களிடையே ஒருவித பாகுபாட்டையோ அல்லது மனவருத்தத்தையோ ஏற்படுத்தலாம். அனைவரும் ஒரே மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தில்தான் பள்ளியில் குழந்தைகள் படிக்கிறார்கள். எங்களது இயக்கமும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும். எனவே, மாணவர் நலன் கருதியே இந்தத் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
மாணவர்களின் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்போது இந்த முகவரி மற்றும் ஆதார் விவரங்கள் மூலம் அவர்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் இது ஏதுவாக அமையும். அதேபோல், வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது அவசரத் தேவைகளுக்கு மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும். இதை மட்டும்தான் நாங்கள் செய்யப் போகிறோம்.
சில ஊடகங்களில், இது சாதிச் சான்றிதழுடன் இணைக்கப்படப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், சாதி விவரங்கள் இதில் எப்போதும் இணைக்கப்படப் போவதில்லை. அனைவரும் ஒன்றுதான், எல்லா மரமும் ஒன்றுதான், எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் நம்முடைய கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. எனவே, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் போன்ற ‘டேட்டா’க்கள் மட்டுமே இதில் இருக்கும்.
10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து இரு துறைகளும் இணைந்து விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறோம். கொடிவேரி அணையில் அவ்வப்போது சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு குறித்து,மீனவர் சங்கம் அங்கே தயாராக இருக்கிறது. இங்கு நீச்சல் தெரியாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. கீழே இருக்கின்ற அருவிகளில் குளித்துக் கொள்ளலாமே தவிர, மேலே மதகுகள் அணையின் தேக்கப் பகுதிகளில் யாரும் நீச்சல் அடிக்கக் கூடாது என்பதுதான் இதுவரையிலும் இருக்கின்ற நடைமுறை.
ஜனநாயகத் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமன் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுவாக, பிரதிநிதிகளை நியமிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இந்தியாவில் இருக்கிற அனைவருக்கும் அந்தச் உரிமை இருக்கிறது. இதில் எந்தத் தவறும் இல்லை.
மேகதாது அணை விவகாரத்தில் அவர் தமிழ்நாட்டிற்குச் சாதகமாகப் பேசுவாரா என்ற கேள்விக்கு—இன்றைக்கு நியமிக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுப்பவர்கள்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அல்லது கொண்டு வரவிருக்கிற திட்டங்களாக இருந்தாலும் சரி, நதிநீர்ப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அதற்காக முழுமையாக வாதிடுவதற்கும், உரிமைக் குரல் எழுப்புவதற்கும் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து பேசிய அவர், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது காலதாமதமாவது குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு பேரிடர் நிதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்கள் தொகை மற்றும் இயற்கைப் பேரிடர் பாதிப்புகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் இயற்கை இடர்ப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பேரிடர் பாதிப்பு அதிகமாக உள்ள ஆந்திரா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியும், மற்ற மாநிலங்களுக்குக் குறைவான நிதியும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு இந்த நிதி இன்னும் கூடுதலாகத் தேவைப்படும். வெள்ளச் சேதங்கள் ஏற்படும் போது, முதலமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று, மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைப் பெற்றுத் தருவார். அதிமுகவிலிருந்து விலகிய எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், யாரோ சொல்கின்ற தனிப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கட்சியில் மீண்டும் வாய்ப்பு வழங்குவதும் வழங்காததும் தலைமை எடுக்க வேண்டிய முடிவு” என்றார்.
