சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் சாலை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் மகன்களுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக அமைச்சர் சேகர்பாபுவின் இல்லத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணப் பரிமாற்றங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் ரெய்டு காரணமாக மயிலாப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
