சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மகளிர் கிரிக்கெட்டை உலக அளவில் ஊக்கப்படுத்தும் நோக்கில், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.21 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், இரண்டாம் இடம் பிடிக்கும் (Runner-up) அணிக்கு ரூ.10 கோடி வழங்கப்படவுள்ளது. மேலும், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.6.29 கோடி வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொடருக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பரிசுத் தொகை ரூ.82 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அறிவிப்பானது 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் பரிசுத் தொகையைக் காட்டிலும் 10% அதிகமாகும். ஐசிசியின் இந்த அதிரடி நடவடிக்கை மகளிர் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், அதிகப்படியான வீராங்கனைகளை இத்துறைக்கு ஈர்க்கவும் இந்த நிதி ஒதுக்கீடு பெரிதும் உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
