இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியும், சமூகச் சமத்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவருமான அண்ணல் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் தேசிய விடுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2025-ம் ஆண்டே அம்பேத்கரின் பிறந்த தினத்தைப் பொது விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவித்திருந்தது. “அரசியலமைப்பின் தந்தை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியான பாபாசாகேப் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இன்று இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
https://x.com/gssjodhpur/status/1905594963775373803?
மத்தியப் பிரதேசத்தின் மோவில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்த டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவை வடிவமைத்ததில் மிக முக்கியப் பங்காற்றியவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வழக்கறிஞரான முதல் நபர் என்ற பெருமைக்குரிய இவர், இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார். பொருளாதார நிபுணர், சிறந்த கல்வியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 9 மொழிகளில் புலமை பெற்றவர் என்பதுடன், வெளிநாட்டில் முனைவர் (Doctorate) பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தவர். விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழ்கின்றன.
அண்ணல் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் மறைந்த டிசம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் ‘மகாபரிநிர்வான் திவாஸ்’ ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது பிறந்த நாளைத் தேசிய விடுமுறை தினமாக அறிவித்ததன் மூலம், சமூக நீதிக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற தொண்டிற்கு தேசம் தனது நன்றியைச் செலுத்துவதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் உள்ளிட்ட தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். சமூகச் சமத்துவத்தின் புதிய சகாப்தத்தைப் படைத்த பாபாசாகேப்பின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
