மேற்காசிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (இன்று) டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் போர்ப் பதற்றத்தால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு அமைச்சகங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து பிரதமர் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்வார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்காசியப் பதற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில்”மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது,” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் போது, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG), சமையல் எரிவாயு (LPG) மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் காரிஃப் மற்றும் ரபி சாகுபடிப் பருவங்களுக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் இருப்பது குறித்தும் அவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தவறான தகவல்கள் பரவுவதையும், வதந்திகள் உருவாவதையும் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு உண்மையான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். “தற்போது நிலவி வரும் உலகளாவியச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரச்சனைகளைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்,” என்று பிரதமரின் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியச் சூழலை ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்களுக்கு இடையேயான உயர்மட்டக் குழு ஒன்றை கடந்த மாதம் மத்திய அரசு அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்தக் குழு, அன்று முதல் பலமுறை கூடி ஆலோசனைகளை நடத்தியதுடன், இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கணித்து, தேவைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
