இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த தனது 19-வது ஆண்டு நிறைவு நாளில், நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.
நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது பத்ம விருதுகள் வழங்கும் இந்த விழாவில், மொத்தம் 65 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய அசாத்திய பங்களிப்பிற்காக ரோஹித் சர்மாவுக்கு இந்தியாவின் 4-வது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். மேடையில் மிகுந்த நெகிழ்ச்சியோடு ரோஹித் சர்மா இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘ஹிட்மேன்’: கடந்த 2007-ஆம் ஆண்டு இதே ஜூன் 23-ஆம் தேதி தான் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக அறிமுகமானார். சரியாக அவர் அறிமுகமாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடையும் அதே நன்னாளில், நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதும் அவரைத் தேடி வந்திருப்பது அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் உலகையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
