டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் இரண்டாவது கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.
பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன: சிறந்த மற்றும் மேன்மையான சேவைக்காக பத்ம விபூஷன், உயர்ந்த தரம் வாய்ந்த சிறப்புமிக்க சேவைக்காக பத்ம பூஷன் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு இவ்விருதுகள் அளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிரதம மந்திரியால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களில் 66 பேருக்கு மே 26 அன்று நடைபெற்ற முதல் பத்ம விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்த பி.நாராயணன், கே.டி.தாமஸ் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதும்,
தமிழ்நாட்டை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ், சமூக சேவகர் டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன், நடிகர் மம்மூட்டி உள்பட 7 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும்,
நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, பகவந்தாஸ் ராய்க்வார், மகளிர் ஹாக்கி அணி சவிதா புனியா உள்பட56 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
