தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப். 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை (ஏப். 21) மாலை முதல் தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் தேர்தல் விதிகள் மேலும் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126ன் கீழ் பின்வரும் விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன.
- பிரசாரத்திற்குத் தடை: ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.
- மின்னணு ஊடகக் கட்டுப்பாடு: தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, சமூக வலைதளங்களான வாட்ஸ்ஆப், முகநூல் (Facebook), எக்ஸ் (Twitter) மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாகத் தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரசாரத்தையும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெளியார் வெளியேற்றம்: தொகுதிக்குச் சம்பந்தமில்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாத அனைவரும் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குள் அந்தந்த தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் குறித்துத் தீவிர சோதனை நடத்தப்படும்.
- வாகனக் கட்டுப்பாடுகள்: வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் வாகன அனுமதி உள்ளிட்ட அனைத்துப் பிரசார வாகன அனுமதிகளும் ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் காலாவதியாகும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மற்றும் தேர்தல் முகவர் ஆகியோருக்கு தலா ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
- தண்டனை விவரம்: தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
- வாக்குச்சாவடி மையங்கள்: வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே மட்டுமே இரண்டு நபர்களைக் கொண்ட வேட்பாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
